இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் சிக்கல்: உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக | AIADMK boycotts local body elections

820197

சென்னை: இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் உள்ள சிக்கல் காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி நிறைவு பெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் ஆகும்.

510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் கட்சி வேட்பாளர்களை அங்கீகரித்து படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் கையொப்பமிடுவதில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்கள் பரிசீலனை 27-ம் தேதி நிறைவு பெற்றது. வேட்புமனுவை வாபஸ் இன்று கடைசி நாள் ஆகும். வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்பாகவே படிவங்களை வழங்கினால் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடையும் போது சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அதற்குள்ளாக கட்சித்தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இல்லை சின்னம் கிடைப்பத்தில் உள்ள சிக்கல் காரணமாக உள்ளாட்சி தேர்தல் அதிமுக புறக்கணித்து உள்ளது.

இதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36- வது வார்டு, தஞ்சாவூர் மாநகராட்சியில் 8-வது வார்டு , தேனி பெரியகுளம் நகராட்சியில் 26 -வார்டு, மயிலாடுதுறை நகராட்சியில் 19 -வது வார்டு, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் புதுக்கோட்டையில் 7- வது வார்டு மற்றும் கடலூரில் 26- வது வார்டு ஆகியவற்றில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவில்லை.

அதேசமயம் மீதமுள்ள ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர், மற்ற இதர ஊராட்சி பதவியிடங்களில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு படிவம் ஏ மற்றும் படிவம் பி வழங்கப்படாத நிலையில் அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருதப்படும் சூழல் உள்ளது.



நன்றி!

Exit mobile version