ஸ்டார் சிங்கர் 4 இறுதிப் போட்டியில் கோவைப்புதூரைச் சேர்ந்த பாடகி முதலிடம் | Kovaipudur Based Singer Won First Place Star Singer 4 Finale

932739

கோவை: கோவையில் ‘ஸ்டார் சிங்கர் 4’ நிகழ்ச்சியை கோவை பட்டாம்பூச்சிகள் இசைக்குழுவுடன், கோயம்புத்தூர் மெரிடியன் ரோட்டரி சங்கம், லயன்ஸ் மாவட்டம் 324 டி, கோவை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை, இந்து தமிழ் திசை ஆகியவை இணைந்து நடத்தின.

‘ஸ்டார் சிங்கர் 4’ இறுதிப்போட்டி குனியமுத்தூர் என்எஸ்கே கிராண்ட் ஸ்பேஸ்-ல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பின்னணிப் பாடகர் பிரசன்னா, சூப்பர் சிங்கர் சோனியா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மூன்று சுற்றுகளாக நடந்த இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாகப் பாடி, கோவைப்புதூரைச் சேர்ந்த பாடகி சிவாலி அரோரா முதலிடம் பிடித்தார்.

அவருக்கு ஸ்டார் சிங்கர் பட்டமும், முதல் பரிசாக ரூ.50,000 தொகையும் வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பாடகர் கோவை பிரதீப், 3-வது இடத்தை ஈரோடு பிரதீபா பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்டார் சிங்கர் தலைவர் சிங்கை என்.முத்து, பட்டாம்பூச்சிகள் இசைக்குழு தேவா, லயன்ஸ் மாவட்ட ஆளுநர் ஜான் பீட்டர், மெரிடியன் ரோட்டரி தலைவர் பெரியசாமி, ஜவஹர், முத்துக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரோமா பொன்னுசாமி, டாக்டர் புஸ்பராஜ், லயன்ஸ் துணை ஆளுநர்கள் மோகன்குமார், சண்முசுந்தரம், ‘இந்து தமிழ் திசை’ விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி!

Exit mobile version