நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.

fish meein tamil deepam

முதலையாக இருந்திருந்தால் நீர் நிலம் இரண்டிலும் வாழலாம்
மீனாக இருப்பதால் நீரில் மட்டுமே வாழலாம்!

மீனவனின் வலையில் சிக்கியது மீன்
மீனவன் படகில் வைத்திருந்தான் மீனை!

சிங்கள் இராணுவம் வந்து சிறை பிடித்தது
சோகத்துடன் இருந்த மீனும் இலங்கை சென்றது!

நேரம் கடந்ததால் மீனின் உயிர் பிரிந்தது
நேரத்தே தமிழகம் வந்திருந்தால் குழம்பாயிருக்கும்!

யாருக்கும் பயன்படாமல் காய்ந்து கருவாடானது
யாராவது பேசி படகு மீட்பார்கள் என்றிருந்தான்!

கேள்வி கேட்க நாதியே இல்லை இங்கு
கண்டபடி சுடுகிறான் வலையை கிழிக்கிறான்!

படகையும் பறிக்கிறான் மீனையும் சிதைக்கிறான்
பாதிக்கப்பட்ட மீனவனுக்கு நிவாரணம் கிட்டவில்லை!

வயிற்றுப் பிழைப்பிற்காக கடலுக்குச் சென்ற மீனவனின்
வயிற்றில் அடிப்பதை வாடிக்கையாகச் செய்கிறான்!

உலகமகா ரவுடியாக கடலில் வலம் வருகிறான்

ஒருவருமே அவனை ஏன் என்று கேட்பதில்லை!

மீன் கருவாடாவது போலவே மீனவனும் கருவாடாகின்றான்
மீனவனின் பாடு மீனை விட கொடுமையானது!

காக்கை குருவியென சுட்டுத் தள்ளுகிறான்
காட்டுமிராண்டியை விட மோசமாக நடந்து கொள்கிறான்!

மனசாட்சி இல்லாத மிருகமாக சிங்களப்படை
மனிதாபிமானமற்ற முறையில் தினமும் தாக்குகின்றான்!

மீனவனின் வாழ்வில் விடியல் என்றோ தெரியவில்லை
மீனவன் தினமும் செத்து செத்து பிழைக்கின்றான்! 

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version