நீதிமன்ற வளாகத்தில் தகராறு செய்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மெத்தனம்: சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றச்சாட்டு | Police not take action on BJP persons: Minister ragupathi complaint

809908
809908

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட விடாமல் தகராறு செய்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் மெத்தனமாக இருந்துள்ளனர் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ஆன்லைன் லாட்டரி, ரம்மி உள்ளிட்டவற்றை ஒழிப்பதில் இபிஎஸ், ஓபிஸ்ஸைவிட எங்களுக்கு அக்கறை அதிகம். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் புதிய சட்டம் கொண்டுவரப்படவில்லை. ஆன்லைன் ரம்மி, லாட்டரி போன்ற புகார்களுக்கு காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கருணாநிதியின் படத்துக்கு நேற்று (நேற்று முன்தினம்) வழக்கறிஞர்கள் மரியாதை செலுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வழக்கறிஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மெத்தனமாகவே இருந்துள்ளனர்.

பாஜகவினர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கஇதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.

மேலும், திமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து பட்டியல் வெளியிடப்போவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகிறாரே என்ற கேள்விக்கு, மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Exit mobile version