சமூகம்செய்திகள்டிரெண்டிங்

1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: அமைச்சர் முக்கிய ஆலோசனை!

1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்

கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்தது. தொடக்கப் பள்ளிகளை திறப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு, அந்த கருத்துகள் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கொரோனா பரவல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு நீட்டித்து அறிவித்துள்ளது. மேலும், 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, பள்ளிகள் திறப்பு பற்றி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக்கல்வி இயக்குநர்களுடன் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்காக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *