கவிதைகள்வாழ்வியல்

நீ கண் சிமிட்டினால்! கவிஞர் இரா. இரவி

நீ கண் சிமிட்டினால் எதுவும் முடியும் என்னால்
நிந்தன் பார்வையின் பயனை நான் அறிவேன்!

முடியாத்தை முடித்து வைக்கும் உன் பார்வை
முயற்சி திருவினையாக்கும் உணர்த்திடும் உன் பார்வை!

சாவி கொடுத்த பொம்மையாக ஆடிடுவேன்
செல்வி உந்தன் பார்வையின் பயனாய்!

சோம்பேறியையும் சுறுசுறுப்பாக்கும் உன் பார்வை
சுகவாசியையும் உழைப்பாளியாக்கும் உன் பார்வை!

கடைக்கண் காட்டினால் கடல் மீது நடந்திடுவேன்
காதல் பார்வைக்கு ஆற்றல் மிக அதிகம்!

இதழ்கள் மௌனமாகி விழிகள் பேசிடும்
இடையில் பார்ப்போருக்கு எதுவும் புரியாது!

காந்தம் இழுத்திடும் இரும்பை அருகே
கன்னியின் பார்வையும் இழுத்திடும் காந்தமே!

பள்ளத்தில் விழுந்து தவிக்கும் யானையென
பாவை உன் உள்ளத்தில் விழுந்து தவிக்கிறேன்!

ஆயிரம் பேரில் அவள் அமர்ந்து இருந்தாலும்
அழகிய விழிகள் அவளை காட்டிக் கொடுக்கின்றன!

அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
அன்று கம்பர் உரைத்தது இன்றும் தொடர்கின்றது!

விழிவழி விசித்திர உணர்வு தருகிறாள்
வயிற்றின் பசியைப் போக்கி விடுகிறாள்!

அடங்காத காளையையும் அடக்கி விடுவேன்
அழகி அவள் கண் சிமிட்டினால் போதும்!

என்னை எனக்கு உணர்த்தினால் பார்வையால்
எதுவும் முடியும் என்பதை என்னுள் விதைத்தாள்

பார்வை ஒன்று போதும் அந்த பரவசத்தால்
பாரினில் வலம் வருவேன் வெற்றி வீரனாக!

கண் சிமிட்டி அன்று காதலை உரைத்தாள்
காளை என்னை கண்களால் அடக்கி ஆட்கொண்டாள்

நன்றி
கவிஞர் இரா.இரவி

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *