கவிதைகள்வாழ்வியல்

தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு ! கவிஞர் இரா .இரவி !

நடுநிசியில் நங்கை ஒருத்தி டெல்லியில்
நண்பனுடன் பேருந்தில் பயணித்தப்போது !

போதையில் இருந்த மனித நாய்களால்
பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளது !

யார் காரணம்? யார் காரணம் ?
யான் சிந்தித்துப் பார்த்தேன் !

போதையைப் பொதுவாக்கி இளைஞர்களின்
பாதையைத் தவறாக்கிய அரசும் காரணம் !

அன்பு செலுத்த வேண்டிய பெற்றோர்கள்
பணம் செலுத்தி விடுதியில் சேர்க்கின்றனர் !

மனிதாபிமானம் இல்லாத வக்கிரமான
மனித விலங்காக வளர்கின்றனர் !

ஊடகங்களும் இந்தஅவல நிலைக்கு
ஒரு வகையில் காரணமாகின்றன !

அன்று வெள்ளிக்கிழமை அரைமணிநேரம்
பொதிகையில் ஒளியும் ஒலியும் ஒளிபரப்பானது !

இன்று இருபத்திநான்கு மணி நேரமும் தொலைக்காட்சிகளில்
ஒளியும் ஒலியும் தணிக்கையின்றி ஒளிபரப்பாகின்றது !

தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்து புத்தியைக் கெடுத்து
பிஞ்சுகளின் நெஞ்சங்களில் ஆபாசநஞ்சு விதைப்பு !

நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில்
நீதி போதனை வகுப்புகள் நடந்தது !

இன்று நீதி போதனை வகுப்புகள் இல்லை பள்ளிகளில்
இன்று காமபோதனை வகுப்புகள் உண்டு ஊடகங்களில் !

தலைநகரில் நிகழ்ந்த தலைகுனிவு இனியும்
தொடராதிருக்க சமுதாயத்தைச் சீர்படுத்துவோம்

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *