கவிதைகள்வாழ்வியல்

என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்!கவிஞர் இரா. இரவி.

சீனாவில் தொடங்கிய தொல்லை துயரம்
சின்னாபின்னமாகியது ஒட்டுமொத்த உலகம்!
கண்களுக்குத் தெரியாத கொடிய நுண்கிருமி
கண்களில் விரல்விட்டு ஆட்டி வருகின்றது!
வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை
வறுமையில் வாடியோரையும் விட்டு வைக்கவில்லை!
அமிதாப்பச்சன் குடும்பத்தையே தொற்று தொற்றியது
அமித்சா அமைச்சரையும் தொற்று தொற்றியது!
தமிழகத்து அமைச்சர்களையும் பதம் பார்த்தது
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களையும் சோதனை செய்தது!
நூறு ஆயிரம் லட்சம் என்றானது தொற்று எண்ணிக்கை
நாட்டில் குறையும் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம்!
கொடிய அரக்கன் கொரோனாவைக் கொல்ல
கடுமையான முயற்சியும் ஒருபுறம் நடக்கின்றது!
தடுப்பூசி தடுப்பின்றி பயன்பாட்டிற்கு வந்துவிட்டால்
தடுத்து விடலாம் கொரோனாவின் பரவலை!
கைகழுவி கைகழுவி கைரேகைய அழிந்தது
கண்கள் தவிர முகத்தை மூடி திட்டு முட்டானது!
என்று மடியும் இந்த கொடிய கொரோனா தொற்று
அன்று விடியும் மனித குலத்தின் நல்வாழ்வு!
ஏழைகளின் வாழ்வில் கடும் இன்னல் விளைவித்தது
ஏழைகளை உழைக்க விடாமல் பரம ஏழையாக்கி மகிழ்ந்தது!
எத்தனையோ கொடிய நோய்களை ஒழித்து இருக்கிறோம்
இத்தனை கொடிய கொரோனாவை ஒழித்துக் கட்டுவோம்!

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *