புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில், குட்கா முறைகேடு, ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கெனவே வருமான வரித்துறையினர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆகியோர்முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தினர். அதில், பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி சென்றனர்.
இந்நிலையில், இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்கு நேற்று காலை 7 மணிக்கு 3 கார்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் விஜயபாஸ்கர் இல்லை.
வீட்டில் இருந்த அவரது தந்தைசின்னத்தம்பி, தாயார் அம்மாக்கண்ணு ஆகியோரிடம் விசாரணைமேற்கொண்டனர். மேலும், அங்குநிறுத்தப்பட்டிருந்த அவர்களுக்குசொந்தமான கார்களையும் திறந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரிக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர். இரவு 7 மணியளவில் சோதனை நிறைவடைந்தது.
தகவலறிந்த அதிமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு திரண்டனர். பாதுகாப்பு பணியில் இலுப்பூர் போலீஸார் ஈடுபட்டனர்.
![](https://tamildeepam.com/wp-content/uploads/2020/05/tamildeepam-flex-logo.png)
Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982