வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்து
வந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் !
கவியரசர் என்பதனால் அவன் சந்தித்த
புவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் !
சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்
விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன் !
எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்து அவன்
எட்டாத உயரம் பாடலால் தொட்டவன் !
முறுக்கு மீசைக்காரன் மட்டுமல்ல அவன்
முண்டாசுக் கட்டிய முத்தமிழ் வேந்தன் !
எளிய தமிழில் இனிய கவி யாத்தவன்
எல்லோருக்கும் புரியும்படி எழுதியவன் !
முப்பத்தியொன்பது ஆண்டுகள்தான் அவன்
மூச்சு இருந்தது இன்று வரை பேச்சு உள்ளது !
கனகசுப்பு ரத்தினத்தின் குருவாகியவன்
கவி பாரதி தாசனை உருவாக்கியவன் !
பன்மொழிகள் அறிந்திருந்த காரணத்தால் அவன்
பைந்தமிழன் சிறப்பை செழிப்பை உணர்த்தியவன் !
பாரதி பாடிய பாடல்கள் யாவும் என்றும்
பா ரதியாக அழகிய பாடல்கள் ஆனது !
திருவல்லிக் கேணியில் வாழ்ந்து சிறந்தவன்
செந்தமிழ்க் கேணியாக இருந்து வென்றவன் !
விடுதலை உணர்வை பாட்டால் விதைத்தவன்
விடுதலை அடைந்துவிட்டதாகப் பாடியவன் !
பெண் விடுதலைக்கு பாடல்கள் செய்தவன்
பெண்இன உயர்வுக்கு ஏணியானவன் !
அச்சமில்லை என்று பாடிய வீரமகன்
அன்பாய் குழந்தைப் பாட்டும் பாடியவன் !
நூற்றாண்டு கடந்தும் இன்றும் வாழ்பவன்
நூற்றாண்டு பல ஆனாலும் என்றும் வாழ்வான் !
நன்றி
கவிஞர் இரா.இரவி
Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982