கவிதைகள்

கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் இன்று 17.10.2020. கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !

கவியரசு கண்ணதாசன்


சங்க இலக்கியத்தை
சாமானியருக்குச் சமர்பித்தவர்
கவியரசு !
திருக்குறளின் நுட்பத்தை
திரைப்பாடலில் வடித்தவர்
கவியரசு !
நிரந்தரமானவன் அழிவில்லை
நிதர்சனமான உண்மை
கவியரசு!
பணத்தை மதிக்காதவர்
குணத்தை மதித்தவர்
கவியரசு!
தித்திக்கும் பாடல்களை
திகட்டாமல் தந்தவர்
கவியரசு !
நடிகர் திலகம் மக்கள் திலகம்
சிகரமடையக் காரணமானவர்
கவியரசு !
காலத்தால் அழியாத
கல்வெட்டுக்கவி புனைந்தவர்
கவியரசு !
கொடிக்கட்டிப் பறந்த போதும்
செருக்கு இல்லாத எளியவர்
கவியரசு !
ரகசியம் இல்லாத
அதியசக் கவிஞர்
கவியரசு !
முற்றிலும் பொருத்தமானவர்
பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
கவியரசு !
கள்ளம் கபடமற்றவர்
குழந்தை மனம் படைத்தவர்
கவியரசு !
கண்ணே கலைமானே
கடைசியாகப் பாடியவர்
கவியரசு !
கவியரசு என்றால் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி .
கவியரசு என்றால் கண்ணதாசன் !
கண்ணதாசன் என்றால் கவியரசு !
“ஆறு மனமே ஆறு ” பாடலின் மூலம்
ஆறுதல் வழங்கிய கவியரசு நீ !
“வெற்றி பெற்ற மனிதரெல்லாம் ” பாடலில்
தோற்றவருக்குத் தெம்பு தந்தவன் நீ !
“நான் மலரோடு தனியாக” பாடலில்
நல்ல காதலை சுகமாக வடித்தவன் நீ !
“மலர்களைப் போல் தங்கை” பாடலுக்கு
மயங்காத உள்ளம் இல்லை உலகில் !
“போனால் போகட்டும் போடா “பாட்டில்
புத்திப்புகட்டும் நிலையாமையைப் பாடினாய் !
“நான் சார்ந்த மதம் தாமதம் “என்று சொல்லி
நீ தாமதத்தையும் நகைச்சுவையாக்கியவன் !
சித்தர்கள் பாடல்களை எளிமைப் படுத்தி
சித்திரமாய் திரையில் தீட்டித் தந்தவன் நீ !
வாழ்வியல் கருத்துக்களை பாடல்களில்
வற்றாத ஜீவ நதியாக வார்த்தவன் நீ !
காதலின் வேதனையை பாட்டில்
கடவுளோடு ஒப்பிட்டுப் பாடியவன் நீ !
ஆங்கில இலக்கியம் படிக்காத நீ
ஆங்கில இலக்கியம் வென்றாய் பாட்டில் !
சங்க இலக்கியத்தை திரைப்பாடலில் வைத்தாய்
சாமானியருக்கும் புரிந்திட பாடல் படைத்தாய் !
கம்ப இராமாயண கருத்துக்களையும்
கனிச்சாறாக பாட்டில் பிழிந்தவன் நீ !
“படைப்பதனால் என் பெயர் இறைவன்” என்று
படைத்தாய் இறவாத பாடல்களை நீ !
எந்த நிலையிலும் மரணமில்லை என்று பாடி
இன்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறாய் நீ !
உனக்குப் பின் பாட்டெழுத யார் யாரோ வந்தனர்
உன் இடத்தை யாருமே எட்ட வில்லை !
கவியரசு என்றால் கண்ணதாசன் !

கண்ணதாசன் என்றால் கவியரசு !

பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் !
கவிஞர் இரா .இரவி !
காதல், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் பாடியவர்
கற்கண்டுப் பாடல்களை வெண்திரையில் தந்தவர் !
கடவுள் காதலித்து சாக வேண்டும் என்பதை
நண்பர் சௌந்தர்ராசனுக்காக வாட வேண்டுமென மாற்றியவர் !
அண்ணனிடம் கடன் கேட்டு மறுத்த நேரத்தில்
அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பாடல் வடித்தவர் !
சிறுகூடல்பட்டி என்ற ஊருக்குப் பெருமையை
பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர் !
முத்தையா படைத்த பாடல்கள் தமிழ்ச் சொத்தானது
சொத்தையான பாடலை என்றும் எழுதாதவர் !
எம்மதமும் சம்மதமென எல்லா மதத்திற்கும் எழுதியவர்
எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்று சொல்லியவர் !
பதறி விரைவாக மகிழுந்து ஓட்டிய ஓட்டுனரிடம்
பத்துநிமிடம் தாமதமாகப் போனால் பரவாயில்லை !
பூமியை விட்டு மிக விரைவாக என்னை
பத்து வருடங்கள் முந்தி போக வைத்திடாதே என்றவர் !
மாணவர் கவிதையை தான் வாசித்து அரங்கில்
மாணவருக்குப் பாராட்டை வாங்கித் தந்தவர் !
பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு
பல்வேறு பொருள்களில் பொருள்படப் பாடியவர் !
கவியரங்குகளில் கைதட்டல் கவிதைகள் வாசித்தவர்
கவிதைக்கு பெரும் மதிப்பை பெற்றுத் தந்தவர் !
ஏமாற்றத் தெரியாததால் அரசியலில் வெல்லவில்லை
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் உள்ளம் பெற்றவர் !
கல்வி வள்ளல் காமராசர் மதித்த கவிஞர்
கக்கன் வாழ் வேண்டுமென வாழ்த்திய கவிஞர் !
மக்கள் திலகமும், நடிகர் திலகமும் புகழ்பெறக் காரணமானவர்
மக்கள் மனதில் விட்டு நீங்காத பாடல்கள் வடித்தவர் !
காலார நடந்து சென்னை வீதியில் சிலை அருகே உறங்கிட
காவலருக்கு கையூட்டுத் தர பணமின்றி அலைந்தவர் !
பாட்டெழுதி அதே வீதியில் அய்ந்து சொந்த கார்கள்
பயணிக்க சொந்தப்படம் எடுத்து மகிழ்ந்தவர் !
இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஊதியமென சம்பாதித்து
இந்தியாவைப் போல கடனும் பெற்றவன் என்றவர் !
ஒளிவுமறைவின்றி தன் வரலாறு வடித்தவர்
ஒப்பற்ற காந்தியடிகள் போல உண்மைகள் எழுதியவர் !
மகனுக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியவர்
மகன் மகள் கவிதை மட்டுமல்ல வரிகளையும் அடிக்காதவர் !
அதிகம் படிக்காவிட்டாலும் அதிகம் பாடியவர்
அதிகம் படித்தவர்களும் பார்த்து வியந்தவர் !
கொள்கைப் பாடல்கள் திரைப்படத்தில் எழுதியவர்
கொலைவெறிப் பாடல்களின் காலம் இது !
தமிழ் இக்கியங்களை பாடல்களில் வடித்தவர்
தமிழ்க்கொலை பாடல்களின் காலம் இது !
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிந்தன் அருமை இன்று உணர்கிறோம். !
கவியரசு என்றால் கண்ணதாசன், கண்ணதாசன் என்றால் கவியரசு

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் !

.கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டாத உயரம் உயரந்தவன் நீ !
கவியரசு பட்டத்திற்கு முற்றிலும்
குவலயத்தில் பொருத்தமானவன் நீ !
நான் நிரந்தரமானவன் என்று அறிவித்து
நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைத்தவன் நீ !
உன் பாடல் ஒலிக்காத வானொலி இல்லை உலகில்
உன் பாடல் ஒலிக்காத வானொலி வானொலியே இல்லை !
ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினரும்
அன்போடு ரசிக்கும் பாடல் உன் பாடல் !
எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்றுரைத்து
சினம் கொண்ட அவையைச் சிரிக்க வைத்தவன் நீ !
படைத்தவன் யார் ?என்பது முக்கியம் அல்ல
படைப்பைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியவன் நீ !
உனக்கு இணையான ஒரு கவிஞன்
உனக்கு அடுத்து யாருமில்லை என்பதே உண்மை !
உனக்கு நிகர் நீ மட்டுமே தான்
உன்னை விஞ்சிட எவருமில்லை உலகில் !
தொகைக் குறிப்பிடாதக் காசோலைத் தந்தபோதும்
தொகைக் குறிப்பிட ஆசைப் படாதவன் நீ !
பணத்திற்காக ஏங்கும இந்த உலகில்
பணத்திற்காக ஏங்காத நல்லவன் நீ !
செருக்கோடு இருந்த திரை உலகில் பலரின்
செருக்கை அகற்றிய கவிஞன் நீ !
கண்ணதாசனே உன் இயற்ப பெயர் முத்தையா
கற்கண்டென நீ வடித்த பாடல்கள் தமிழின் சொத்து ஐயா !
எங்கு நீ கற்றாய் இத்தனை வித்தை
இனிய பாடல்கள் பதிந்து மனதில் விதையாக !
காலத்தால் அழியாத கல்வெட்டு வரிகளை
காற்றினில் விதைத்த சகல கல வல்லவன் நீ !
நீ குடித்து விட்டு எழுதியதாக அறியாதவர்கள் உளறினர்
நீ குடித்து விட்டு எழுதவில்லைஅறிந்தோர் சொன்னார்கள் !
மகாத்மா காந்தியடிகளின் சத்திய சோதனைப் போல
மன வாசம் வீசும் ரகசியம் இல்லா வனவாசம் படைத்தாய் !
அத்திப் பூத்தது போல அதிசயமாகப் பூத்த கவிஞன்
அன்பில் குழந்தைப் போல உள்ளம் கொண்டவன் நீ !
வானில் இருந்து வந்த தேவ தூதன் நன் என்று சொல்லாதவன்
மண்ணில் இருந்து பிறந்து மண்மக்களுக்காக் பாடியவன் நீ !
மதுக் குடிக்க உரிமம் கேட்டு நீ விண்ணப்பித்த போது
மறுத்தார் கக்கன்ஜி தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக !
மது மட்டும் நீ குடிக்காமல் வாழ்ந்து இருந்தால்
மதுர கவி இன்னும் பல்லாயிரம் பாடி இருப்பாய் !
இயேசு காவியம் எழுதிய காலங்களில் நீ
மிகத் தூய்மையாக இருந்ததாகப் பேராயர் கூறினார் !
முன் பாதியில் உனக்கு இணையான நாத்திகன் இல்லை
பின் பாதியில் உனக்கு இணையான ஆத்திகன் இல்லை !
சிறு கூடல் பட்டி என்ற சிற்றூரில் பிறந்த நீ
சிகாகோ வரை புகழ் பலப் பெற்றாய் !
உன் பாடல் இல்லை என்று பொய் உரைத்தப் போதும்
உன் பாடல் தான் என்று அறுதியிட்டார் மக்கள் திலகம் !
உடலால் உலகை விட்டு மறைந்த போதும்
பாடலால் மக்கள் மனங்களில் வாழ்பவன் நீ !
உலகம் உள்ளவரை தமிழ் மொழி நிலைக்கும்

தமிழ் மொழி உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்

கவியரசர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !
சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்து
பெரும் கூடல் பாட்டு எழுதிய கவியரசர் !
முத்தையா அவர் எழுதிய பாடல்கள் எதுவும்
சொத்தையில்லை தமிழ் சொத்தானது !
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டாத கருத்துக்களை எட்டிட வைத்தவர் !
இராமனின் தந்தை தசரதனுக்கு மூன்று மனைவி !
கவிதையின் தந்தை கண்ணதாசனுக்கு மூன்று மனைவி !
பொன்னம்மா பார்வதி வள்ளியம்மை என்று
பெண்கள் மூவரின் நாயகன் கவியரசர் !
முடிசூடா மன்னராக திரை உலகில்
முத்தமிழில் திகழ்ந்தவர் கவியரசர் !
திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவதில்
தனி முத்திரை நன்கு பதித்தவர் கவியரசர் !
மயக்கமா கலக்கமா பாடலின் மூலம்
மக்களுக்கு தன்னம்பிக்கை விதைத்தவர் !
வந்த நாள் முதல் பாடலின் மூலம்
வந்த மனிதனின் மாற்றம் உணர்த்தியவர் !
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் பாடலின் மூலம்
குறுக்கு வழியின் தீமையை உணர்த்தியவர் !
தை பிறந்தால் வழி பிறக்கும் பாடலின் மூலம்
தவித்தவர்களுக்கு ஆறுதல் வழங்கியவர் !
ஆசையே அலை போலே பாடலின் மூலம்
ஆசையை அழித்திட அறிவுறுத்தியவர் !
பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலின் மூலம்
பிறந்த மனிதர்களுக்கு மகிழ்ச்சி தந்தவர் !
உள்ளதைச் சொல்வேன் பாடலின் மூலம்
உள்ளதைச் சொல்லி உள்ளத்தில் நின்றவர் !
அச்சம் என்பது மடமையடா பாடலின் மூலம்
அச்சம் அகற்றி வீரம் விதைத்தவர் !
போனால் போகட்டும் போடா பாடலின் மூலம்
போனவர்களுக்காக வருத்தாதே என்றவர் !
வீடு வரை உறவு பாடலின் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர் !
சேரமான் காதலி என்ற உன்னத படைப்பிற்காக
சாகித்ய அகாதமி விருது பெற்றவர் !
குழந்தைக்காக வசனத்திற்காக தேசிய விருதை
குமுகாயம் போற்றிடப் பெற்றவர் கவியரசர் !
வணங்காமுடி என்ற புனைப்பெயரில் எழுதி
வணங்காமுடியாக வாழ்ந்தவர் கவியரசர் !
அர்த்தமுள்ள இந்துமதம் மட்டுமல்ல
இயேசு காவியமும் எழுதியவர் கவியரசர் !
முற் பாதியில் நாத்திகம் போதித்தவர்
பிற் பாதியில் ஆத்திகம் போதித்தவர் !
கவிதை கதை கட்டுரை நாடகம் அனைத்தும்
கணக்கின்றி வடித்த சகலகலாவல்லவர் !
கவியரசர் கண்ணதாசன் உடல் இல்லை !
கவியரசர் கண்ணதாசன் பாடல் உண்டு !
அழிவில்லை எனக்கு என்று சொன்னவர் !

அழியாத பாடல்கள் எழுதி நின்றவர் கவியரசர் !

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !
கவிஞர் இரா .இரவி !
சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !
பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !
கவிதை கதை கட்டுரை வடித்தவனே !
கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே !
எந்த நாளும் எனக்கு அழிவில்லை என்றவனே !
எந்த நாளும் அழிவின்றி மக்கள் மனங்களில் நின்றவனே !
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்றவனே !
அந்த பறவை போலவே வாழ்ந்து காட்டியவனே !
அச்சம் என்பது மடமையடா என்றவனே !
அச்சம் இன்றி துணிவுடன் வாழ்ந்தவனே !
ஆறடி நிலமே சொந்தமடா என்றவனே !
அற்புத வாழ்வியல் தத்துவம் உரைத்தவனே !
உலகம் பிறந்தது எனக்காக என்றவனே !
உலகில் பிறந்து உணர்வில் கலந்தவனே !
வீடு வரை உறவு வீதி வரை மனைவி !
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவனே !
ஆசையே அலை போல என்றவனே !
ஆசையை அடக்க அறிவுறுத்தியவனே !
காலத்தைக் கடந்து நின்றவனே !
காலத்தால் அழியாத பாடல் படைத்தவனே !
கல்வெட்டு வரிகளை மனங்களில் பதித்தவனே !
கவிஞன் என்ற சொல்லிற்கு பெருமை சேர்த்தவனே !
உலகம் உள்ளவரை உன் பெயர் நிலைக்கும் !
உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top