வாழ்வியல்கவிதைகள்

தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி

தமிழா நீ பேசுவது தமிழா !
தமிழா இப்படிப் பேசுவது தகுமா ?

காலைப் பொழுதை மார்னிங் என்றாய்
மதியப் பொழுதை ஆப்ட்ரநூன் என்றாய்

மாலைப் பொழுதை ஈவ்னிங் என்றாய்
நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய்

பாட்டை சாங் என்றாய்
வீட்டை ஹவுஸ் என்றாய்

படுக்கை அறையை பெட்ரூம் என்றாய்
கழிவறையை டாய்லெட் என்றாய்

தமிழை டமில் என்றாய்
தண்ணீரை வாட்டர் என்றாய்

சோற்றை ரைஸ் என்றாய்
உப்பை சால்ட் என்றாய்

கடற்கரையை பீச் என்றாய்
காதலியை லவ்வர் என்றாய்

கண்களை அய்ஸ் என்றாய்
கடிதத்தை லெட்டர் என்றாய்

பள்ளியை ஸ்கூல் என்றாய்
கல்லூரியை காலேஜ் என்றாய்

மாணவனை ஸ்டுடென்ட் என்றாய்
ஆசிரியரை டீச்சர் என்றாய்

வானொலியை ரேடியோ என்றாய்
விமானத்தை பிளைன் என்றாய்

தொலைக்காட்சியை டிவி என்றாய்
தொலைபேசியை போன் என்றாய்

பணத்தை மணி என்றாய்
குணத்தை கேரக்டர் என்றாய்

வஞ்சியை கேர்ள் என்றாய்
விபத்தை ஆக்ஸிடென்ட் என்றாய்

இப்படிப் பேசியே தமிழைக் கொல்கிறாய்
எப்போது வரும் உனக்கு தமிழ் உணர்வு !

தமிழா உன்னிடம் ஒரு கேள்வி சிந்தித்துப் பார்
ஆங்கிலேயன் தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுவானா ?

ஈழத் தமிழர்களின் உச்சரிப்பைப் பார்
சோகத்திலும் சுந்தரத் தமிழ் பேசுகின்றனர்

தமிழைச் சிதைப்பது தமிழனுக்கு அழகா ?
தமிழா !சிந்தித்து தமிழிலேயே பேசு !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *