ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவது தேர்தல் நன்னடத்தை விதியில் வராது: உயர் நீதிமன்றக் கிளை கருத்து | Allowing jallikattu does not fall under Election Conduct Rule High Court bench
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவது தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் வராது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கஜேந்திரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டி, தேனிமலை, மேட்டுப்பட்டி கிராம மக்கள் சேர்ந்து கடந்த 107 ஆண்டுகளாக பங்குனி உத்திர திருவிழா நடத்தி வருகின்றனர். இத் திருவிழாவுக்கு அடுத்த நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்தாண்டு மார்ச் 25-ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, தேனிமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மக்களவைத் தேர்தல்நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்குவது என்பது தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் வராது. இதனால், மனுதாரரின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.